சென்னை, ஜூலை 17- புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து 5000 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும் பொதுமக்களிடம் ஒருகோடி கையெழுத்து பெறுகிற மாபெரும் மக்கள் இயக்கமும் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் புதனன்று (17.7.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
பிரதமர் மோடி இரண்டாம் முறை பதவி யேற்ற இரண்டாம் நாளே கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய கல்விக் கொள்கைக்கான அறிக்கையை சமர்பித்தது. இதன் அடிப்படையில் ‘தேசிய கல்விக் கொள்கை - 2019’ நகல் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கை தாய்மொழிவழிக் கல்வியை மறுத்து, மும்மொழிக் கல்வியை திணிக்க முயற்சிக்கிறது. கல்வியை முழுமை யாக வணிகமயமாக்கி, தனியார்மய மாக்குகிறது. சாதியப் பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் பழைய குருகுலக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட மதவாதக் கொள்கைகளை விஷ மத்தனமாக கொண்டு வர முயற்சிக்கிறது. இந்த புதிய கல்விக் கொள்கை, நமது தேசத்தை இருண்ட காலத்திற்கு கொண்டு செல்லும். இந்தியாவின் பன்முகப் பண்பாடு, சமூக நீதி சமத்துவத்தை அது அழித்திடும். செம்மொழியான தமிழ் மொழியையும் இதர மாநில மொழிகளை யும் வளர்ப்பதற்கு புதிய கல்விக் கொள்கை யில் எதுவும் இல்லை. மாறாக, பிராகிரதம், பாலி போன்ற சமஸ்கிருத கிளை மொழி களை வளர்த்தெடுப்பதற்கு தனி கல்விக் கூடங்கள் ஏற்படுத்துவதற்கும், அவற்றுக்கு நிதியாதாரங்களை அளிப்பதற்கும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கல்வி, கலாச்சார தேவைகளை நசுக்கும் அபாயம்
பிரதமரின் தலைமையில் தேசிய கல்வி ஆணையம் ஒன்றை அமைத்து, கல்வியில் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு ஒற்றை அதிகார அமைப்பு அமைக்கப்பட உள்ளது. கல்வித்துறை சார்ந்த ஒட்டுமொத்த அதிகாரமும் இன்று அதிகாரத்தில் உள்ள மதவெறி சக்திகளிடம் சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாநில மக்களின் கல்வி கலாச்சாரத் தேவைகளை நசுக்கிடும் அபாயம் உருவாகி உள்ளது. மாநில உரிமை களை பறித்து, கூட்டாட்சி முறையையும் அழிக்கிற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நீட் தேர்வு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்தது. தற்போது புதிய கல்விக் கொள்கை வசதி வாய்ப்பு இல்லாதவர்களை பள்ளிக்கல்வியோடு கல்வியை கைவிட்டு ஓடும் வகையில் தேசிய தேர்வு குழுமம் விரிவாக்கப்பட்டு, பல்கலைக் கழகம் மற்றும் அனைத்து வகை கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளது. உயர்கல்வி முழுவதும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சர்வதேச சந்தைக்கும் தாரை வார்ப்பதற்கான ஆலோசனைகளை புதிய கல்வி கொள்கை கொண்டுள்ளது.
குருகுலமுறைக்கு கொண்டு செல்லும் கொள்கை
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகக் கலாச்சாரத்தை அழிக்கும் வகையில் நாடு முழுவதும் பயிற்றுவிப்பு என்ற வகையில் மாற்றப்படுகிறது. நவீன அறிவியல் வளர்ச்சி, சமூக மேம்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு மாறுதல்களை கல்வியில் கொண்டு வருவதற்கு பதிலாக, மிகவும் பின்னோக்கிச் செல்லும் வகையில் புராதன குருகுல முறைக்கு நாட்டை கொண்டு செல்கிறது புதிய கல்விக் கொள்கை. கல்வி உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பள்ளிக் கல்வியை தனியாருக்கு விட்டு கட்டணங்களை உயர்த்துவதற்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுடன் கூடுதலாக மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு தேசிய பொதுத்தேர்வு நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல தேர்வுகளை நடத்துவது, ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளை வடிகட்டி, அவர்களின் கல்வி வாய்ப்பை பறித்திடுகிற முயற்சியே. நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற அடிப்படை கோட்பாடுகள் அனைத்தையும் புதிய கல்விக் கொள்கை தகர்க்கிறது. நமது எதிர்காலத் தலைமுறை மீது மத்திய அரசு பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது
எதிர்ப்பியக்கம்
எனவே, இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் எதிர்ப்பியக்கம் வழியாக புதிய கல்விக் கொள்கையை முற்றாகத் திரும்பப் பெற மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரத்தை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 2019 ஜூலை 25 முதல் 30 வரை 5000க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும். புதிய கல்விக் கொள்கை மீதான ஆபத்தை மக்களிடம் விளக்கி, அவர்களது எதிர்ப்பைத் திரட்டும் வகையில் ஒரு கோடி கையெழுத்துகளை பெறுவதற்கான மாபெரும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திடும். இந்த பேரியக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அணிகள் முழுவதும் களமிறங்குகின்றன. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் இந்த பேரியக்கத்திற்கு பல்வேறு மக்கள் அமைப்புகள் உள்ளிட்டு, ஒட்டுமொத்த தமிழக மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறது.